Thursday, May 14, 2009

ம.ம.க வினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய 5 குண்டர்கள் கைது

சென்னை: மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸில் நேற்று மனித நேய மக்கள் கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். திமுக பகுதி செயலாளரையும் தேடி வருகின்றனர்.

நேற்று நடந்த வாக்குப் பதிவின்போது ஐஸ் ஹவுஸ் பகுதியில், திமுகவினர் திடீர் வன்முறையில் இறங்கினர்.

என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கள்ள ஓட்டுக்கள் போடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த தி.மு.க.வினருக்கும் மனித நேய மக்கள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

மனித நேய மக்கள் கட்சியினரை அவர்கள் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் வெறித்தனமாக தாக்கினர். ஓட ஓட விரட்டித் தாக்கினர்.

இதில் அசன்அலி உள்பட 8 பேர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த மோதலால் ஐஸ் ஹவுஸ் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டன. போர்க்களம் போல அப்பகுதி காணப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ரவுடிகளுக்குப் பெயர் போன அயோத்தியாகுப்பத்தைச் சேர்ந்த முத்துக்குமார், வடிவேல், மூர்த்தி, தனசேகர், சசிகுமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலை நடத்தச் சொல்லி தூண்டி விட்டதாக வேட்பாளர் ஹைதர் அலியால் குற்றம் சாட்டப்பட்டுள்ள தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஜெ, ராமதாஸ் கண்டனம்:

திமுகவினரால் மமகவினர் தாக்கப்பட்டதற்கு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,.

நேற்று காலை மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு தங்கள் வாக்குகளை செலுத்திக் கொண்டிருந்தனர். திடீரென்று திமுக ரவுடி கும்பல் அந்த வாக்குச் சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட முனைந்துள்ளது.

இதைத் தட்டிக் கேட்ட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக பலருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.

கழக தொண்டர்கள் மீதும், இஸ்லாமிய சமுதாயத்தினர் மீதும் திமுகவினர் நடத்தியுள்ள கொலை வெறித் தாக்குதல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐஸ்ஹவுஸ் பகுதியில், வாக்காளர்களை விரட்டிவிட்டு கள்ள ஓட்டுப்போட்டுக்கொண்டிருந்த கும்பலை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியும், அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் காவல் துறையினரிடம் அடையாளம் காட்டி அப்புறப்படுத்த முயற்சித்தபோது, கள்ள ஓட்டுப்போட முயற்சித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஹைதர் அலியையும், அவரது கட்சியினரையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.

இதில் 6 தொண்டர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த வன்முறை தாக்குதலையும், இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையினரின் போக்கையும் வன்மையாக கண்டிக்கிறேன் என அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
நன்றி:Thats Tamil

No comments:

Post a Comment